சிலுவையைக் குறித்தேயல்லாமல், வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாமல் இருப்பேனாக என்று பவுல் சொல்லுகிறார். இன்று பலருக்கு பல காரியங்கள் மேன்மையாக இருக்கிறது. தாங்கள் மேன்மையாக கருதுகிறவைகளுக்காக எதையும் இழக்கj; தயாராக இருக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே மேன்மை என்ன என்பதைக் குறித்து வேதம் பல காரியங்களை நமக்குசொல்லிக் கொடுக்கிறது.
வேதத்தில் நீதி-4-7,8 வசனங்களில், ஞானமே முக்கியம், ஞானத்தை சம்பாதி. என்னத்தை சம்பாதித்தாலும், புத்தியை சம்பாதித்துக்கொள். நீ அதை மேன்மைப்படுத்து. அது உன்னை மேன்மைப்படுத்தும். நீ அதை தழுவிக் கொண்டால், அது உன்னை கனம் பண்ணும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஞானமும், புத்தியும் கிறிஸ்துவே. கிறிஸ்துவையும் அவர் தியாகமாக சுமந்த சிலுவையையுங் குறித்தே மேன்மை படுத்த வேண்டும்.
இயேசுவின் அற்புதங்களால் மாத்திரம் ஈர்க்கப்பட்டு, அவரை பின்பற்ற முடியாது. இயேசுவைப்போல சிலுவையை சுமந்து கொண்டு தான் அவரை பின்பற்ற வேண்டும். இயேசு சிலுவையை எப்படி சுமந்தார். அவர் சிலுவையை சுமந்தபோது, போர்சேவகர்கள் செய்த நிந்தனைகளை, அடிகளை, அவமானங்களை, கடிந்துகொள்ளுதலை, அலட்சியப்படுத்துதலை, கீழ்படியாமையை, ஏரோது மற்றும் பிலாத்துவின் கைவிடப்படுதலை, பேதுருவின் மறுதலிப்பை, சீஷர்கள் சிதறடிக்கப் பட்டதால் தனிமையை, சரீரம் பிய்க்கப்பட்டு பாடுகள் அனுபவித்ததால் வலிகளை வேதனைகளை, எருசலேம் குமாரத்திகள் மற்றும் தாயார் மரியாளின் கண்ணீரை, கதறுதலை, இப்படி பல வேதனைகளை சகித்தார். இயேசுவை பின்பற்றுவதைக் குறித்து வேதத்தில் இயேசு சொல்லியிருக்கிற சில காரியங்களைப் பற்றி தியானிப்போம்.
லூ-9-23 ல் ”இயேசு சீஷர்களை நோக்கி, ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் (1) தன்னைத் தான் வெறுத்து, (2) தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றக்கடவன் என்று சொன்னார்”. இந்த வசனத்தை இரண்டு விதமாக தியானிக்கலாம்.
தன்னைத் தான் வெறுத்து, இயேசுவை பின்பற்ற வேண்டும்.
ஒருவன் இயேசுவை பின்பற்ற வேண்டுமானால், தன்னையே வெறுத்துவிட வேண்டும் என்பதல்ல. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு status உண்டு. அந்த statusஐ எப்படியாகிலும் காப்பாற்ற வேண்டும் என்று எந்த எல்லைக்கும் போகத் துணிவார்கள். இந்த எண்ணங்களைத் தான் வெறுக்க வேண்டும் என்று ஆண்டவர் சொல்லுகிறார். அதாவது, தன் சுயத்தை, தன் கர்வத்தை, தன் பெருமையை, தன் பதவியை, தன் படிப்பை, இப்படி உலகப் பிரகாரமாக தனக்கு மேன்மையானவைகள் என்று எவைகளை கருதுகிறார்களோ அவைகளை, பவுலைப் போல குப்பையாக எண்ணி வெறுத்து ஒதுக்கிவிட்டு, தன்னை வெறுமையாக்கிக் கொண்டு தேவனை பின்பற்றும்போது, தேவனுக்கேற்ற மண்பாண்டமாக வனையப்பட்டு, பலி பீடத்தில் பயன்படுத்தப்படும் பொற்பாத்திரமாக, தேவனுக்கு உகந்த பாத்திரமாக, தேவனால் பயன்படுத்தப்படக் கூடியவர்களாக விளங்கமுடியும் என்பதைதான், தன்னைத்தான் வெறுக்க வேண்டும் என்று இயேசு சொன்னார்.
தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு இயேசுவை பின்பற்ற வேண்டும்-
லூ -9-23 – ”ஒருவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு இயேசுவை பின்பற்றக்கடவன்”
வசனத்தில் வெறுமனே “சிலுவை“ என்று சொல்லாமல், “தன் சிலுவையை“ அனுதினமும் எடுத்துக் கொண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. தன் சிலுவை என்றால், அவரவருக்கு தேவனால் கொடுக்கப்பட்ட சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு> இயேசுவை பின்பற்ற வேண்டும் என்று அர்த்தம். ஒவ்வொருவருக்கும் தேவனால் கொடுக்கப்பட்ட கடமைகளை, தெய்வீக பொறுப்புகளைத்தான், “தன்சிலுவை“ என்று சொல்லப்பட்டுள்ளது.
இயேசு உலகத்தின் பாவத்தை சுமக்கும்படி தனக்கு கொடுக்கப்பட்ட சிலுவையை சுமந்து வெற்றி சிறந்ததுபோல, தேவனால் அவரவருக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை அனுதினமும் வெற்றிகரமாக செய்துகொண்டே, முடிவுபரியந்தம் தேவனை பின்பற்ற வேண்டும் என்பதே.
இயேசுவின் பிள்ளைகளாக அவரால் கொடுக்கப்படும் நன்மைகளை ருசிக்க வேண்டும். பரலோகம் போகவேண்டும் என்ற சுகமான கனவுகளோடு மாத்திரம் அவரை பின்பற்றுவதை தேவன் விரும்பவில்லை. அவரவருக்கு தேவன் கொடுத்துள்ள ஊழியத்தை, சிலுவை சுமப்பது போல அனுதினமும் செவ்வனே செய்து, இயேசுவை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறோம்.
தேசத்திலே இயேசுவை பின்பற்றுகிற விஷயத்தில் பொதுவாக, ஜனங்களிடையே காணப் படுகிற 3 விதமான தன்மைகளைக் குறித்து லூ-9 – 57-62 வரையுள்ள வசனங்களில் இயேசு நமக்கு காண்பித்துக் கொடுக்கிறார்.
முதலாவது வகை – பொருளாசையை, விட முடியாதவர்கள் இயேசுவை பின்பற்ற முடியாது.
லூ-9-57-58 – ”இயேசுவும் அவருடைய சீஷர்களும் வழியிலே போகையில், ஒருவன் அவரை நோக்கி, ஆண்டவரே நீர் எங்கே போனாலும் உம்மை பின்பற்றி வருவேன் என்றான்”. அதற்கு இயேசு நரிகளுக்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு. மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை” என்றார்.
இந்த சம்பவத்தில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் போய்க் கொண்டிருக்கையில், ஒருவன் வந்து ஆண்டவரே நீர் எங்கே போனாலும் உம்மை பின்பற்றி வருவேன் என்று வலிய வந்து சொல்லுகிறான். அதற்கு இயேசு அவனை “வா“ என்று கூப்பிடவுமில்லை, “வேண்டாம்” என்று மறுக்கவும் இல்லை. அதற்கு பதிலாக, எனக்கே தலைசாய்க்க இடமில்லை என்று இலைமறை காயாக பதிலளிக்கிறார். அதாவது என்னைப் போல நீயும் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்.
உண்மையிலேயே இந்த மனிதனுக்கு ஆண்டவரை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமிருந்தால், பரவாயில்லை ஆண்டவரே, உம்முடைய சீஷர்களைப் போல நானும் உம்மை பின்தொடர்ந்து வருகிறேன் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அவன் எதுவும் சொன்னதாக வேதத்தில் காணப்படவில்லை. இந்த மனிதன் இயேசு செய்த அற்புதங்களினால் ஈர்க்கப்பட்டவனாக, இயேசுவோடு சென்றால், அற்புத அடையாளங்களால் தனக்கு ஆஸ்தியை சம்பாதித்துக் கொடுப்பாரென்று நினைத்திருக்கலாம். அதனால் தான் எனக்கோ தலைசாய்க்க இடமில்லை என்று சொன்னதும், சைலன்ட்டாக நழுவிவிட்டான்.
”பொருளாசை” சிலுவையைக் குறித்து மேன்மை பாராட்டவும், தன் சிலுவையை எடுத்துக் கொண்டு கிறிஸ்துவை பின்பற்றவும் தடையாக இருக்கிறது” என்பதை இதன் மூலம் இயேசு நமக்கு சொல்லிக்கொடுக்கிறார்.
இந்த வசனத்திலிருந்து தன்னை பின்பற்றுவதைக் குறித்து தேவனின் எதிர்பார்ப்புகள் என்ன?
- உலகப்பிரகாரமான எதிர்ப்பார்ப்புகளினின்றி கர்த்தரை விசுவாசிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்.
- வசதி வாய்ப்புகளினிமித்தம் கிறிஸ்துவை புறக்கணிக்க கூடாது என்று வலியுறுத்துகிறார்.
- ஜீவனாகிய கிறிஸ்துவை பார்க்கிலும் வசதிகள் முக்கியமானதல்ல என்பதை சொல்லுகிறார்.
- எதிர்பார்ப்புகளற்ற அர்ப்பணிப்பை நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
- கிறிஸ்துவினால் மாத்திரமே நாம் பிழைப்பூட்டப்பட வேண்டுமென்று விரும்புகிறார்.
- உணர்ச்சிவசப்பட்டு தேவனை பின்பற்ற நினைத்தால், நிலைத்திருக்க முடியாதென்பதை தெளிவிக்கிறார்.
- எதிர்பார்ப்பின்றி முழுமனதோடு பின்பற்றுகிறவனே இறுதிவரை கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க முடியும் என்பதை கற்றுத்தருகிறார்.
லூ-959-60 – ”வேறொருவனை அவர் நோக்கி, என்னை பின்பற்றி வா என்றார். அதற்கு அவன் ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம் பண்ண எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான். அதற்கு இயேசு, மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும். நீ போய் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கி” என்றார்.
இந்த வசனங்களில் உள்ள மனிதனை இயேசுவே என்னை பின்பற்றி வா என்று அழைக்கிறார். அதற்கு அவன் முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம் பண்ண எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்பதன் அர்த்தம், முதலாவது என் குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்து முடித்தபின்பு இயேசுவே உம்மை பின்பற்றி வருகிறேன் என்று சொல்லுகிறான். இன்றும் பலர் தங்களுடைய உன்னத அழைப்பை இப்படித்தான் அலட்சியப்படுத்துகிறார்கள். பலர் இளமைபருவம் என்பது சம்பாதிக்கவும், சுபிட்சமாக வாழ வேண்டியதுமான பருவம் என்றும், ரிடையர்டான பிறகு மெதுவாக வந்து தேவஊழியத்தை செய்தால் போதும் என்றும் நினைத்து செயல்படுகிறார்கள். ஆனால், தேவனோ ”உன் வாலிப பிராயத்தில் உன் சிருஷ்டிகரை நினை” என்று சொல்லுகிறார்.
கிறிஸ்து மரித்தோர் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும் என்று சொல்லுகிறார். மரித்தோர் என்றால், ”கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவன்” அல்லது ஜீவனை பெற்றுக் கொள்ளாதவன்” என்று அர்த்தம்.
தன் வாலிப பிராயத்தில் சிருஷ்டிகரை நினையாமல், குடும்பத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பவர்களால் சிலுவையை குறித்து மேன்மை பாராட்ட முடியாமலும், தன் சிலுவையை சுமந்து கொண்டு இயேசுவை பின்பற்ற தகுதியற்றவர்களாகவும் ஆகி விடுகிறார்கள் என்று இயேசு எச்சரிக்கையிடுகிறார். இராயனுக்கு வேண்டியதை இராயனுக்கும், தேவனுக்கு வேண்டியதை தேவனுக்கும் கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும்.
மூன்றாவது வகை- குடும்ப பாசத்திலிருந்து விடுபட முடியாதவர்கள் இயேசுவை பின்பற்ற முடியாது
லூ-9 - 61-62 – பின்புண் வேறொருவன் அவரை நோக்கி, ஆண்டவரே உம்மை பின்பற்றுவேன் ஆனாலும், முன்பு நான் போய் வீட்டில் இருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக் கொண்டு வரும்படி எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான். அதற்கு இயேசு, கலப்பையின் மேல் தன் கையை வைத்து பின்னிட்டுப் பார்க்கிற எவனும், தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதியுள்ளவன் அல்ல” என்றார்.
மூன்றாவதாக ஒருவன் வலிய வந்து இயேசுவே உம்மை பின்பற்றுவேனென்று சொன்னாலும் குடும்பபாசம் அவனை இழுக்கிறதாயிருந்ததால் அவனால் அதை முழுமனதோடு சொல்ல முடியவில்லை.
இயேசுவை பின்பற்றினால், குடும்பபாசம் இருக்ககூடாது என்று அர்த்தமல்ல. ஊழியத்தை முழுமனதோடு செய்யக்கூடாதபடி குடும்பபாசம் இழுக்கக்கூடாது என்று தான் சொல்லுகிறார்.
இயேசுவை விட குடும்பபாசத்தில் மூழ்கியிருக்கிறவர்களுக்கு சிலுவை மேன்மையாக கருதப்படாது. அவர்களால் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவை பின்பற்ற முடியாது.
முடிவுரை-
இயேசுகிறிஸ்து நம் பாவங்களை மன்னித்து இரட்சிப்பை கொடுப்பது முற்றிலும் இலவசமே! ஆனால் அவரை பின்பற்றி, பாவமில்லாமல் பரிசுத்தமாய் அவருடைய கற்பனைகளுக்கு பின்பற்றி வருவது என்பது எளிதான காரியம் அல்ல! அதனால்தான் அவர் தன்னை பின்பற்றி வருபவர்கள் தன்னைத்தான் வெறுக்க வேண்டும், பின் தன் சிலுவையை எடுத்து கொண்டு பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
- சிலுவை சுமப்பது என்றால், மற்றவர்கள் செய்த குற்றத்தை மன்னிப்பது, உள்ளத்தில் அதை வைத்து கொண்டு வன்மம் தீர்ப்பது அல்ல.
- சிலுவை சுமப்பது என்றால், உலகத்தார் சாதாரணமாக செய்யும் ஈனமான பாவ காரியங்களை விருப்பத்தோடு செய்யாமல், அவற்றில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளாமல் அந்த சோதனையிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது,
- சிலுவை சுமப்பது என்றால், எவருக்கும் துரோகம் செய்யாமல் உண்மையாக இருப்பது,
- சிலுவை சுமப்பது என்றால், இயேசுவைப் போல விழித்திருந்து ஊக்கத்தோடு ஜெபிப்பது,
- சிலுவை சுமப்பது என்றால், நம்முடைய சித்தத்தை செய்யாமல் தேவனுடைய சித்தத்தை நம் வாழ்வில் நிறைவேற்றுவது,
- சிலுவை சுமப்பது என்றால், கைமாறு கருதாது முழுமனதோடு பிறருக்கு உதவி செய்வது,
- சிலுவை சுமப்பது என்றால், பிறர் நம்மை தேவையில்லாமல் தூற்றும்போது அவர்களை திருப்பி தூற்றாமல், மன்னித்து, அவர்களை கர்த்தருடைய கரத்தில் விட்டுவிடுவது,
- சிலுவை சுமப்பது என்றால், பிறர் நமக்கு செய்த துர்க்காரியத்திற்கு பதிலுக்கு பதில் செய்யாமல், பழிக்குப்பழி வாங்காமல், அவர்களுக்கு நன்மை செய்வது,
- பிறர் அநியாயமாய் நம்மேல் குற்றம் சாட்டும்போது பொறுமையாக சகிப்பது.
இப்படி நம் சிலுவையை சுமப்போமானால் அந்த சிலுவை நமக்கு பாரமாக இராமல், சந்தோஷமாகவும், களிப்பாகவும் மாறிவிடும். இப்படி செய்யும்போது, அப்போஸ்தலனாகிய பவுலோடு சேர்ந்து நாமும் ”கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன் - (கலாத்தியர் 2:20) என்று மகிழ்ச்சியோடு கூறமுடியும்.
ஜெபம்- இயேசு நீர் எங்களுடைய பாவங்களுக்காக சிலுவை சுமந்து இரத்தம் சிந்தினீர் என்பதை விசுவாசித்து, என்னுடைய சிலுவையை சுமந்து கொண்டு உம்மை பின்பற்றி வர நீர் உதவி செய்து கொண்டு வருகிறீரே நன்றி செலுத்துகிறோம். நாங்கள் எங்கள் சிலுவையை சுமக்கவும் குற்றமற்றவர்களாக உம்மை பின்பற்றி வரவும், எங்களுக்குத் தடையாக உள்ள சாத்தானின் துர்கிரியைகள் யாவும், சாத்தானின் தந்திரங்கள் யாவும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தினாலும் இரத்தத்தினாலும் முறியடிக்கப்பட வேண்டுமென்று ஜெபிக்கிறோம். எங்கள் மேல் கிருபையாயிருப்பீராக.
சங்-1064 – கர்த்தாவே நீர் தெரிந்து கொண்டவர்களின் நன்மையை நான் கண்டு,
உம்முடைய ஜாதியின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து,
உம்முடைய சுதந்தரத்தோடே மேன்மை பாராட்டும்படிக்கு,
உம்முடைய ஜனங்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து,
உம்முடைய இரட்சிப்பினால் என்னை சந்தித்தருளும்.
இந்த அனுபவத்திற்குள்ளாக நாம் கடந்து செல்லுவோம்.
Shared by Shanthi Ashok, Pondicherry.
28.02.2015
No comments:
Post a Comment