1.மத்:1:3 – தாமார்
2. மத்:1:5 – ராகாப்
3. மத்:1:5 – ரூத்
4. மத்:1:6 – உரியாவின் மனைவி பத்செபாள்
5. மத்:1:18 – கர்த்தருடைய கண்களில் கிருபை பெற்றவளும், இயேசுவின் தாயுமாகிய மரியாள்.
இந்த 5 பேரில் முதல் நான்கு பேரும் இன்னொருவருக்கு மனைவியாயிருந்து, தேவனுடைய செய்கையால் வேறொருவருக்கு மனைவியாகி, இயேசுகிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம்பெற்ற பாக்கியவதிகள். ஐந்தாவதாக இருக்கிற மரியாளோ இன்னொருவருக்கு நியமிக்கப்பட்டு, பரிசுத்தாவியால் உற்பத்தியான இயேசுகிறிஸ்து இந்த மண்ணுலகிற்கு வர காரணமாயிருந்தாள்.
இதை தியானிக்கும் போது உலகத்திற்கு அடிமையாயிருந்த நம்மை, தமது மணவாட்டியாக்கும்படி, தேவன் தமது கிருபையால் நம்மை தேடிவந்து, தமக்காக வேறுபிரித்து, தமது பிள்ளை என்னும் பாக்கியத்தை கொடுத்திருக்கிறார் என்ற தைரியத்தோடு பரலோகத்தில் பிரவேசிப்போம் என்று விசுவாசிக்கிறோம்.
(2) இயேசுவின் பிறப்பை எதிர்பார்த்திருந்தவர்கள்
6.லூ:1:6,7 – பிள்ளையில்லாத எலிசபெத்தின் மூலமாக, கர்த்தருடைய சகல கற்பனைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாய் நடந்து தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாக நடந்து கொள்பவர்கள் பிள்ளைப்பேறினால் இரட்சிக்கப்படுவார்கள் என்ற சத்தியம் சொல்லப்பட்டுள்ளது.
7.லூ:2:36,38–84 இயேசுவின் பிறப்பை முன்னறிந்து காத்திருந்தவர்களில் ஒருவளான 84 வயதுள்ள அன்னாள் தீர்க்கதரிசி தேவாலயத்தில் மீட்புக்காக காத்திருந்த யாவரிடமும் கர்த்தரை புகழ்ந்து பேசினாள்.
(3) இயேசு தமது போதனைகளில் மேற்கோள் காட்டிய பழைய ஏற்பாட்டு காலத்து பெண்கள். – 4 பேர்
8.மத்:12:42 – சேபாவின் ராஜகுமாரத்தி சாலமோனின் ஞானத்தை தேடிவந்ததை நினைவுகூறி சாலமோனிலும் பெரியவராகிய தம்மை ஜனங்கள் அறியாமல், அடையாளம் தேடுகிறதை கண்டித்தார்.
9.லூ:4:25-27 – தான் தன் ஊரிலே அங்கிகரிக்கப்படாததை குறித்து, தீர்க்கதரிசிகள் தன் ஊரிலே அங்கிகரிக்க படுவதில்லை என்பதற்கு எலியாவை குறிப்பிடுகையில், சாரிபாத் விதவையைப் பற்றி நினைவுகூறுகிறார்.
10.லூ:4:27 – குஷ்டரோகத்திலிருந்து நாகமான் சுத்தமாக்கப்பட்டதை நினைவுகூறும் போது, நாகமானை அனுப்பிய சிறுபெண் கனப்படுத்தப்படுகிறாள்.
11.லூ:17:32 – லோத்தின் மனைவியை நினைவுகூறி, பின்னிட்டு திரும்பகூடாது என்பதை வலியுறுத்துகிறார். தன் ஜீவனை இரட்சிக்க வகை தேடுகிறவன் அதை இழந்து போவான். இழந்து போகிறவன் அதை உயிர்பித்துக் கொள்வான் என்பதை சொல்லிக் கொடுக்கிறார்.
(4) வியாதியிலிருந்து குணமாக்கப்பட்ட ஸ்திரீகள்
12.மத்:8:14 – ஜீரமாக கிடக்கிற பேதுருவின் மாமியை இயேசு தொட்டவுடனே, ஜீரம் நீங்கி, உடனே அவள் எழுந்து அவர்களுக்கு பணிவிடை செய்தாள்.
13.லூ:13:10-17 – பதினெட்டு வருடமாய் பலவீனப்படுத்தும் ஆவியினால் கூனியாயிருந்த ஸ்திரீயை குணமாக்கி, சாத்தானின் கட்டுகள் அவிழ்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை சொல்லித் தருகிறார்.
14.மத்:9:20-24 – பன்னிரண்டு வருடமாய் பெரும்பாடுள்ள ஸ்திரீ குணமாக்கப்பட்டதினால் ஒருவருடைய தனிப்பட்ட விசுவாசமே அவர்களை இரட்சித்து, குணப்படுத்தும் என்பதைக் உணர்த்துகிறார்.
15.மத்:9:18,24,25 – இறந்து போன யவீருவின் மகளை உயிரோடெழுப்பி தந்தையின் விசுவாசத்தின் மூலமும் பிள்ளைகள் இரட்சிக்கக்கூடும் என்பதைக் உணர்த்துகிறார்.
5) அந்நிய ஸ்திரீகளின் மூலம் சத்தியத்தை வெளிப்படுத்துதல்
16.மத்:15:22 – கானானிய ஸ்திரீயின் மூலம் புறஜாதிகளிடம் காணப்படுகிற பெரிதான விசுவாசத்தினால் அவர்களும் தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதியடைய முடியும் என்பதை போதிக்கிறார்.
17.யோ:4:4-42 – சமாரிய ஸ்திரீயிடம், தான் மேசியா என்று வெளிப்படுத்தி (1) தம்மிடம் தாகத்தோடு கேட்பவருக்கு, ஜீவதண்ணீரை தருவது தேவனுடைய ஈவு என்றும், (2) பிதாவின் சித்தத்தின்படி செய்து அவரது கிரியையை முடிப்பதே போஜனமென்றும், (3) ஆவியாயிருக்கிற தேவனை, ஆவியோடும் உண்மையோடும் எங்கும் தொழுது கொள்ளுங்காலம் வரும் என்றும், சொல்லித்தருகிறார்.
18.யோ:8:1-11 – கல்லெறிந்து கொல்லப்பட நியமிக்கப்பட்ட விபச்சார ஸ்திரீயின் மூலம், தன்னிடத்தில் பாவமில்லாதவர்களே பிறரை குற்றவாளியாக தீர்க்க முடியும் என்ற சத்தியத்தை வலியுறுத்துகிறார்.
(6) பெரியவன் சிறியவன் என்ற போட்டியில்லாமல், தாழ்மையோடிருக்க வேண்டும் என்ற சத்தியம்
19.மத்:20:20-28 – செபதேயுவின் தாய் தன் குமாரர்கள் இயேசு மகிமையடையும் போது அவருடைய வலதிடது பக்கத்தில் அமர வேண்டும் என்று கேட்டதின் மூலம், (1) பெரியவனாயிருக்க விரும்புகிறவன் பிறருக்கு பணிவிடைகாரனாயிருக்க வேண்டுமென்றும், (3) இயேசு அநேகரைமீட்டு தேவனுடைய ராஜ்யத் திற்கு தகுதியடைய பண்ணும்படி தமது ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்பதையும் விளக்குகிறார்.
(7) ஸ்திரீகளைப் பற்றி உவமைகள் மூலம் இயேசு சொன்ன சத்தியங்களும் உண்டு.
20.மத்:23:32 – உயிர்த்தெழுதலில்லை என்று சாதிக்கிற சதுசேயருக்கு, உயிர்த்தெழுதல் உண்டு என்பதை வலியுறுத்தும்படி ஏழுபேரை விவாகம்பண்ணின ஸ்திரீயை குறித்த உவமையின் மூலம் (1) உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை என்றும், (2) உயிர்த்தெழுந்தவர்கள் பரலோகில் தேவதூதரை போலிருப்பார்கள் என்றும், (3) தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல் ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார் என்றும் விளக்கமளிக்கிறார்.
21.லூ:15:8-10 – மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகில் மிகுந்த சந்தோஷமுண்டாகும் என்பதை குறித்து காணாமற்போன வெள்ளிக்காசை கண்டுபிடித்த ஸ்திரீ சந்தோஷப்படும் உவமையை சொல்கிறார்
22.லூ:18:18 – சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும் என்பதைக் குறித்து, கடினமாக நியாயாதிபதியிடம் தொடர்ந்து விண்ணப்பித்து நியாயத்தை பெற்றுகொண்ட விதவையை போல, தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் என்பதை கற்றுத்தருகிறார்.
(8) இயேசுவின் ஊழியப்பாதையில் அவர் உயிரோடெழுப்பியவர்களில் பெண்களின் பங்கு.
23.லூ:7:11-16 – நாயீன் ஊர் விதவையின் மகன் இறந்த போது அவள் மேல் மனதுருகி அவளுடைய மகனை உயிரோடெழுப்பினார். இறந்துபோன யவீருவின் மகள் உயிரோடெழுப்பப்பட்டாள்.
24.யோ:11 - மார்த்தாள் மரியாளின் சகோதரன் இறந்துபோன லாசரு 4 நாட்களுக்கு பிறகு உயிரோடெழுப்பி தேவ மகிமை விளங்குவதற்கு ஏதுவான வியாதியும், பாடுகளும் உண்டு என்பதை தெளிவுபடுத்துகிறார்.
(9) மார்த்தாள் மரியாள் மூலமாக சொல்லப்பட்டுள்ள சத்தியங்கள்
25.மார்த்தாளிடம் (1) விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண முடியும் என்பதையும், (2) நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்றும், (3) உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் என்பதையும் விசுவாசிக்கும்படி சொல்லித்தருகிறார்.
26.லூ:10:38 – மார்த்தாள் மூலம், அநேக காரியங்களைக் குறித்து கவலைப்படுவதைவிட நம்மை விட்டெடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை போதிக்கிறார்.
27.லூ:7:36-50 – பாவியான ஸ்திரீயான மரியாள் இயேசுவின் பாதத்தில் பரிமளத்தைலத்தை பூசி முத்தஞ் செய்ததின் மூலம் இயேசுவின் மேல் மிகவும் அன்புகூறும்போது அநேகபாவமும், கொஞ்சமாய் அன்புகூர்ந்தால் கொஞ்சபாவமும் மன்னிக்கப்படும் என்று விளக்குகிறார்.
28.மத்:26:6-13 – ஏழு பிசாசுகள் துரத்தப்பட்ட மகதலேனா மரியாள் விலையேறப் பெற்ற வெள்ளைப் போளத்தை இயேசுவின் தலையில் ஊற்றியதன் மூலம், தம்முடைய மரணத்தைக் முன்னறிவிக்கிறார்.
(10) தாயாரும் சகோதரருமாக எவர்களை இயேசு பார்க்கிறார் என்பதைக் குறித்த சத்தியம்
29.லூ:8:19-21, லூ:11:27,28 – உம்முடைய தாயாரும் சகோதரரும் வந்திருக்கிறார்கள் என்றும், ”உம்மை சுமந்த கர்ப்பமும், நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகள்” என்று ஒரு ஸ்திரீ சொன்னபோது, ”அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையை கேட்டு, அதின்படி செய்பவர்களே அதிக பாக்கியவான்கள்” அவர்களே எனக்குத் தாயும் சகோதரருமாய் இருக்கிறார்கள் என்று இயேசு சொல்லித்தருகிறார்.
(11) காணிக்கை போடுவதைக் குறித்த சத்தியம்
30.லூ:21:1-4 – ஏழை விதவை தன்னிடமிருந்த 2 காசை காணிக்கை பெட்டியில் போட்டதின் மூலம், ஜனங்கள் தங்கள் பரிபூரணத்திலிருந்து காணிக்கை போடுவதையும், தன்னுடைய வறுமையிலிருந்து காணிக்கை போடுவதையும் கர்த்தர் கவனிக்கிறாரென்ற சத்தியம் விளங்குகிறது
(12) ஊழியப்பாதையிலும், சிலுவை மரணத்தின் போதும், உயிர்தெழுந்த போதும், பரிசுத்தாவியை
பெற்றுக் கொண்ட போதும் அவருடனே கூட இருந்து ஸ்திரீகள்.
31.லூ:8:1-3 – பொல்லாத ஆவிகளையும், வியாதிகளையும் குணமாக்கின சில ஸ்திரீகளும், மகதலேனா மரியாளும், ஏரோதிடம் வேலை செய்பவனின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்து கொண்டுவந்த அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.
32.மத்:27:55-61 – இயேசு சிலுவையில் மரிக்கும்போது, இயேசுவுக்கு ஊழியஞ் செய்யும்படி கலிலேயாவில் இருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகளும், மரியாள்களும், கூட இருந்தார்கள்.
33.மத்:27:19 ல் – இயேசுவுக்கு மரணதண்டனை கொடுக்கும்படி பிலாத்து நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும் போது, பிலாத்துவின் மனைவி, அவனிடத்தில் ஆளனுப்பி, நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம். அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகுபாடுபட்டேன் என்று சொல்ல சொன்னாள்.
34.லூ:23:27-31 – எருசலேம் குமாரத்திகளை நோக்கி, நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று சொல்லுகிறார்.
(13) இயேசு தம்முடைய வருகையின் போது நடைபெறுகிற காரியங்களை குறித்து சொன்ன சம்பவங்கள்
35.யோ:16 – ஸ்திரீகளின் பிரசவகாலத்து வேதனையையும், பிள்ளைபிறந்த சந்தோஷத்தையும், தான் மரித்து உயிர்த்தெழுந்து இரண்டாம் வருகையில் வரபோவதோடு ஒப்பிட்டுபேசி சீஷர்களை ஆறுதல்படுத்துகிறார்.
36.மத்:24 – மனுஷகுமாரன் நினையாத நாழிகையிலே வரும்போது ஆயத்தமுடன் காத்திருக்க வேண்டுமென்பதற்கு ஏந்திரம் அரைக்கிற இரண்டு ஸ்திரீகளில், ஆயத்தமாயிருக்கிறவள் வருகையில் ஏற்றுகொள்ள படுவாள். ஆயத்தமில்லாதவளோ கைவிடப்படுவாள் என்பதை காண்பித்து கொடுக்கிறார்.
37.மத்:25:1-13 தங்கள் தீவட்டிகளோடும், தங்கள் பாத்திரங்களில் எண்ணையோடும் விழித்திருந்து காத்திருந்த புத்தியுள்ள கன்னிகைகள் மணவாளனோடு கலியாண வீட்டுக்குள் பிரவேசித்ததும் கதவு அடைக்கப்பட்டது.
38.தங்கள் எண்ணையில்லாமல் தீவட்டிகளோடு மாத்திரம் காத்திருந்த புத்தியில்லா கன்னிகைகள் கைவிட பட்டு, கலியாண வீட்டின் கதவை தட்டும்போது, மணவாளன் உங்களை அறியேன் என்று சொல்லுவார் என்பதையும் உவமை மூலமாக விளக்குகிறார்.
39.மத்:28:1-10 – உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் பார்த்து பணிந்து கொள்ளும் கிருபையை பெண்களுக்கு தான் தேவன் கொடுத்திருந்தார். கூடவேயிருந்த ஆண்கள் முதலில் அதை நம்பவில்லை.
(14) மணவாட்டிசபையாக இருக்கிற நாம் இயேசுவோடு இருக்கிறதற்காக நன்றி சொல்லுவோம்.
40.தன்னுடைய மணவாட்டி சபையை தம்மோடு தேவனுடைய ராஜ்யத்திற்கு கூட்டிச் செல்ல வரப்போகிற கிறிஸ்துவோடு கூட செல்லும் மணவாட்டிகளாக நாம் இருக்கிறோம் என்பதிலிருந்து தடம்புரளாமல், ஜெயக்கிறிஸ்துவோடு, முடிவுபரியந்தம் நிலைத்திருக்கும்படி நம் ஆவி ஆத்துமா சரீரத்தை முழுமையாக அவரிடம் ஒப்புக்கொடுப்போம். தேவன் நம்மை ஏற்றுக் கொள்வாராக.
மனப்பாட வசனம்:
தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.- லூக்கா10:42
Shared by Sis.Shanthi Ashok, Pondicherry.
03-07-2015
No comments:
Post a Comment