உன் தூசியை உதறிவிட்டு எழும்பு
நேசரது வருகையின் காலம் நெருங்குதல்லவோ
வருகைக்கு ஆயத்தப்படு நேச வைராக்கியத்தோடு
இன்னுங் கொஞ்சம் உறங்கலாமென்கிறாயோ சீயோனே
கைகளை முடக்கிக் கொண்டு தூங்குகின்றாயோ
சடுதியில் ஆபத்தும் நெருங்கி கொண்டிருக்குது பார்
தப்புவிப்பாரின்றி பூமியில் புதைந்திடாதே மகனே
தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிடுங் காலமல்லவோ
திடுக்கிடுஞ் செய்திகளும் கேட்கப்படுகின்றதே
சத்துருவின் ஆட்டங்கள் பெருகுகிறதே மகனே
சத்துவங்களும் அசைக்கப்படுகின்றதே
நிர்விசாரங்களினால் நிறைந்திருக்கிறாயே சீயோனே
நிர்பந்தமான மனிதன் நான் என்செய்வேன் என்கிறாயோ
நிதர்சனமான தேவனின் சித்தஞ்செய்திட எழும்பிடு மகனே
நித்தமும் வேதனையில் துடிக்குங்காலம் நெருங்கிடுதே
தேவவார்த்தையென்னும் பட்டயத்தை எடுத்திடு சீயோனே
போராடி ஜெபித்திடும் ஜெபவீரனாய் வீறுகொண்டெழு
அபிஷேகத்தில் திளைத்து சாத்தானை துரத்திடு மகனே
பரிசுத்த தேவனின் வருகைக்கு தேசத்தை ஆயத்தப்படுத்திடு
நிமிஷந்தோறும் நரகத்தை நாடும் மாந்தரை பார் சீயோனே
நித்தமும் அவர்களின் விடுதலைக்காக கதறியழுதிடு
விடுதலை நாயகனாம் இயேசுவின் நாமத்தை உரைத்திடு
விடுவிக்க இயலாதிடத்திற்கு போகிறவர்களை தடுத்திடு
கற்ற வார்த்தைகளால் கருத்தூன்றி ஜெபித்திடு சீயோனே
நேசரால் கேட்கப்படாத ஜெப நேரங்களைத் தவிர்த்திடு
கல்லுஞ் சுவருங்கூட உனக்கெதிராய் சாட்சியிடும் என்பதறிந்திடு
எந்த ஸ்தானத்திலும், இடத்திலும் சாட்சியோடிருக்க ஒப்புக்கொடு
நெகேமியா போல நிமிஷ ஜெபம் செய்திடப்பழகு சீயோனே
தானியேல் போல மூன்று வேளையும் தவறாமல் ஜெபித்திடு
எஸ்தரைப் போல உபவாச ஜெபத்தால் சதிகளை முறியடித்திடு
இயேசுவைப் போல ஆவியோடும் உண்மையோடும் ஜெபித்திடு
உனக்கருமையானதை சிங்கக்குட்டிகளுக்கு விடாதே சீயோனே
பால சிங்கங்களுக்கு இரையாகும்படி பலவீனப்படாதே
கழுகுக்கு சமானமாய் உன் வயதை வாலவயதாக்கிடு
ஆதியன்பை விட்டிடாமல் கர்த்தருக்காயெழும்பி பிரகாசித்திடு
உனக்கிருக்கும் பெலத்தோடே கிதியோனாயெழும்பிடு சீயோனே
தேவனுடைய பணிகளை யோசுவாபோல முழுபெலத்தோடு செய்திடு
எதிரியின் பெலத்தை தேவ ஞானத்தால் முறித்து தூள்தூளாக்கிடு
அபிஷேக பெலத்தின் முன்பு நிகரேதும் உண்டோ இப்பாரினில்
தேசத்தையழிக்க வரும் வெட்டுக்கிளிகளை துரத்திடு சீயோனே
வெட்டுக்கிளிகளத்தனையாய் தேவசேனையை பெருக்கிட எழும்பு
சாத்தானின் சேனையை முறியடிக்கும் யுத்தவீரனாய் எழும்பிடு
தேசமெங்கும் ஜெபிக்கும் ஜெபவீரர்களை திரளாய் உருவாக்கிடு
புத்தியில்லா கன்னியைப் போல ஆயத்தமிலாதிருந்திடாதே சீயோனே
சுயநல ஜெபங்களிலேயே அமிழ்ந்திராமல் வீரத்தோடெழும்பிடு
தேசத்திற்காய் அழுது புலம்பி ஜெபித்து ஜெயமெடுத்திடு மகனே
உயர்த்துகிற உன் கரத்தினால் வானயுத்தங்களில் ஜெயம் பெற்றிடு
தேசத்து அதிபதிகளின் ஆதிக்கத்தை விரட்டியடித்திடு சீயோனே
ஒவ்வொரு விக்கிரகத்தின் கோட்டைகளையும் தகர்த்தெறிந்திடு
சாத்தானின் பலிபீடங்களத்தனையையும் நொறுக்கி தூளாக்கிடு
நேசரின் வருகைக்காய் வானம்பூமியை பரிசுத்த ஸ்தலமாக்கிடு
தேசமெங்கும், தெருவெங்கும் ஜெபநடை நடந்திடு சீயோனே
போகுமிடமெங்கும் தீழ்ப்பானதிலிருந்து நன்மையை பிரித்தெடு
பலவித மாந்தர்களிடமும் பக்தி வைராக்கியத்தை உருவாக்கிடு
பார்போற்றும் தேவனின் பிள்ளைகளாக்கி நரகத்திற்கு விலக்கிடு
இரத்தப்பழிகளை விலக்கிடும் ஜெபத்தை ஏறெடு சீயோனே
இரத்தப் பழிகளால் நிறைந்திருக்கும் பூமியை பரிசுத்தப்படுத்திடு
கத்தியின்றி இரத்தமின்றி நேசரன்பினால் பூமியை சுதந்தர்த்திடு
உனக்காய் இரத்தம் சிந்தினவரின் வருகையை எதிர்நோக்கிடு
ஜெயமே ஜெயமே ஜெயம் உனக்கே!
ஜெயமே ஜெயமே ஜெயம் நமக்கே!
ஜெயமே ஜெயமே ஜெயம் நம் தேவனுக்கே!
- சாந்தி அசோக்
பாண்டிச்சேரி.
No comments:
Post a Comment