ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். - கலாத்தியர் 6:2

July 12, 2014

பரிசுத்தமாக்கப் படனுமே

உம்மைக் குத்தினப்பாவிகளில்நானும்ஒருவனல்லவா!
மன்னிக்க இயலாத குற்றங்களை செய்த பாவியல்லவா!
பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்று சொன்னீரே!
பாவியாகிய என்னையும் மன்னித்து ஏற்றுக் கொள்ளும்!

                                              ஏனெனில்

இரட்சண்யமாம் தலைச்சீராவை அணியாத என் தலையும்
தேவ அபிஷேகத்தை தரித்துக் கொள்ளாத என் தலைமுடியும்
கர்த்தருக்குப் பரிசுத்தம் என்றெழுதப்படாத என் நெற்றியும்
இச்சையானவைகளை ஆவலுடன் பார்க்கும் என் கண்களும்

விழித்திருந்து பாரத்தோடு ஜெபிக்கத் தவறிய என் இமைகளும்
தூஷண வார்த்தைகளை விருப்பமுடன் பேசும் என் வாயும்
சுகந்த வாசனையான துதியை ஏறெடுக்க தவறும் என் உதடும்
தீமையான வார்த்தைகளை யோசிக்காமல் கக்கும் என் நாவும்

தேவன் பிரியப்படாததை இச்சித்து கேட்கும் என் செவிகளும்
வசனத்தை கேட்காமல் செவித்திணவுள்ள என் செவிப்பாறையும்
எரிகிற அக்கினி வார்த்தையை வைத்திராத என் எலும்பும்
நீதியென்னும் மார்கவசத்தை அணிந்திராத என் மார்பும்

துன்மார்க்கமான பொய்களை பிணைக்கும் என் மனதும்
வசனமென்னும் பட்டயத்தை வைத்திராத என் இருதயமும்
பொல்லாங்கை இடைவிடாமல் யோசிக்கும் என் சிந்தையும்
சத்தியத்தை இடைக் கச்சையாக தரித்திராத என் இடுப்பும்

சுயநீதியை விரைந்து நடப்பிக்கத் துணியும் என் கரங்களும்
விசுவாசத்தை கேடகமாகப் பிடித்திராத என் கைவிரல்களும்
அநியாயத்துக்கு கீழ்படிய விரைந்தோடும் என் கால்களும்
ஆயத்தமாம் பாதரட்சையை அணிந்திராத என் பாதங்களும்

      உம் கிருபையினாலும் இரக்கத்தாலும்

சிலுவையிலறையப் பட்டு பரிசுத்தமாக்கப்பட வேண்டுமே!
இயேசுவே உம் திரு இரத்தத்தால் கழுவப்பட வேண்டுமே!
மாசற்றவர்களாக உம் வருகையில் காணப்பட வேண்டுமே!
நன்றி நன்றி நன்றி நாதா! நன்றி என் இயேசு நாதா!
                            ஆமென்!

 - சாந்தி அசோக்
    பாண்டிச்சேரி.

No comments:

Post a Comment